வெள்ளி, 7 ஏப்ரல், 2023

வியாழன், 16 மார்ச், 2023

அர்ஜுனன் தபசு

 


குடும்பத்தை பிரிந்து சென்னையில் வேலை என்றவுடன் கிடைக்கும் ஒய்வுநேரத்தில் சென்னையை சுற்றிபார்ப்பது வழக்கம். சென்னையின் சுற்றுலாவில்மாமல்லபுரம் முதல்இடம் பிடிக்கும். சமிபத்தில் மகாபலிபுரம் சென்றபொழுது பாறைசிற்பங்களை கண்டுமகிழ்ந்தேன். அதில் அர்ஜூனன்தபசு சிறப்பு. மேற்படி அர்ஜூனன்தபசு சிறுவயதில் திருச்சிஉறையூர் திருத்தாந்தோனிரோட்டில் பொன்னர்சங்கர், அர்ஜூனன்தபசு நாடகங்களை பார்த்து மகிழ்ந்தது ஞாபகத்திற்கு வந்தது. அர்ஜூனன்தபசு பொதுவாக பகீரததபசு என்றும் இக்காட்சிகள் இமயம் எனவும் இல்லைஇல்லை கைலாயம் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

காலச்சுவடுபதிப்பகத்தில் திரு.பாலுசாமி என்பவர் அர்ஜூனன்தபசு எனற பெயரிலேயே இச்சிற்பங்கள் குறித்துபுத்தகம் எழுதிஇருப்பதும் சிறப்பு. மேலும் மயிலைசீனிவேங்கடசாமி அவர்கள் மகாபலிபுரசிற்பங்கள் அனைத்தும் சமணசிற்பங்கள் என மகாபலிபுரத்துஜைனசிற்பங்கள் என புத்தகம் எழுதியிருப்பது இங்கு கவனிக்கதக்கது. அர்ஜூனன்தபசு மகாபலிபுரத்தில் பெருமாள்கோவிலுக்கு பின்புறம்அமைந்துள்ளது. இந்த மிகப்பெரியசிற்பத்தில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், இயற்கைகாட்சிகள் என அனைத்தும் இருக்கும். இச்சிற்பத்தில் தவம் செய்பவர் ஒற்றைகாலில் நின்றபடி கைகளை தலைக்கு மேலே தூக்கிய படி விரல்கள் கோர்த்து நின்றுள்ளார். மார்பு எலும்புகள் எல்லாம் தெரிந்தவாறு மிகுந்த மெலிந்த தேகம் உடையவராக காட்சி அளிப்பார்.

நண்பர்களே அதேபோன்ற தேகத்துடன் சமீபத்தில் ஒருவரை பார்த்தேன். அவரின் பெயரும் அர்ஜூனன் என்பதில் என்னஒற்றுமை. ஆம் சிவகங்கைமாவட்டம், காரைக்குடிதாலுகா பள்ளத்தூர் டாஸ்மாககடைஎண் 7721 ன் கடைவிற்பனையாளர் அர்ஜூனன். கடந்த 03.03.2023அன்று மேற்படி டாஸ்மாக்கடையின் மீது சமூகவிரோதகும்பலால் நடைபெற்றபெட்ரோல்குண்டுவீச்சு தாக்குதலில் உடல்முழுவதும் தீக்காயங்களுடன் நின்று கொண்டு இருந்த அந்தகாட்சி. அர்ஜூனன் அவர்கள் இந்த அரசின் தொழிலாளர்விரோதமனபான்மைக்கு எதிராகதவம் செய்து நிற்பதாகவே இருந்தது. அர்ஜூனன் அவர்கள் பலத்ததீக்காயங்களுடன் சிவகங்கை மற்றும் மதுரையில் சிகிச்சை பார்க்கப்பட்டும் பலனளிக்காமல் 15.03.2023 வீரமரணமடைந்தார்.

தற்பொழுது நமது தமிழகஅரசு அர்ஜூனன் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூபாய் 10லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் தருவதாக கூறியுள்ளது. இதை வரவேற்கும் நேரத்தில் இன்னும் எத்தனை பேரை சாவகொடுப்போம் என எண்ணவேண்டியுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் இதுபுதிதல்ல. ஆம் இந்த அர்ஜூனனுக்கு மட்டும் சிதைவைக்கப்படவில்லை. அர்ஜூனன் அவர்கள் எங்களுக்கு அர்ஜூனன்தபசு மட்டுமல்ல பலரையும் ஞாபகப்படுத்துகின்றார்



ஆம் கொடைகானலில் பணப்பாதுக்காப்பிற்காக டாஸ்மாக்கடைக்குள் படுத்து உறங்க கட்டாயபடுத்தப்பட்டு கரிந்து எரிந்த அந்த பெயர் மறந்த டாஸ்மாக் ஊழியர் ஞாபகம் வருகிறார். பாலமேட்டு தம்பி செந்தில் டாஸ்மாக் விற்பனையாளர் (ஜல்லிக்கட்டுமாடுபிடிவீரர்) மதுவிற்கு அடிமையாய் மெலிந்து நோய்வாய்பட்டு மரணித்து சிதையில் எரியீட்டியது ஞாபகம் வருகின்றது. நண்பன் ரஞ்சித்குமார் மேற்பார்வையாளர் குடிநோய்க்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்ட பூத உடல்சிதையில் எரியீட்டியது ஞாபகம் வருகின்றது. இப்படிஎத்தனைஉயிர்கள். தினம் ஒருவரை காவுகொடுத்துவரும் இந்த டாஸ்மாக்ஊழியர்களின் விடிவுகாலம் எப்பொழுது?


தமிழகஅரசியலில் மதிப்புமிகுந்தமந்திரியின் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன் என்று எதிர்அரசியல்வாதி அதற்கு கூறும் காரணம். அவர் டாஸ்மாக் மந்திரி என்கின்றார். மந்திரியாகவே இருந்தாலும் டாஸ்மாக் என்றால் அவர்கள் இழுக்கு என்கின்றது சமுகம். அப்படி என்றால் கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையை கண்டுகொள்ளுங்கள் மக்களே. தமிழகஅரசே விரைவில் பணிஓய்வு பெறக்கூடிய சூழலில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணிநிரந்தரம் அரசுஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கி இனி ஒரு அர்ஜூனன் உருவாகாமல் பார்த்துகொள்ள டாஸ்மாக்செய்திகள்குழு வேண்டுகின்றது.