புதன், 23 அக்டோபர், 2013

துளையிட்டு மது திருடிய துணைகள் துயில்




வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு செல்லும் சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு திருடப்பட்டு இருப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்த தகவலை தொடர்ந்து மதுக்கடை மேற்பார்வையாளர் ராஜ்குமார் நேற்று காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார்.

அப்போது கடையின் சுவரில் துளைபோட்டு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 100 அடி தூரத்தில் மது பாட்டில்கள் அடங்கிய சாக்குமூட்டையை தலைக்கு வைத்தபடி ஆண்-பெண் இருவர் தூங்கிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தலைக்கு மதுபாட்டில் மூட்டையை வைத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் காவேரிப்பாக்கத்தில் உள்ள அய்யன்பேட்டைசேரி கிராமத்தை சேர்ந்த விஜயன்(வயது 35), அவரது மனைவி வள்ளியம்மாள்(30) என்பது தெரியவந்தது. அவர்களை எழுப்பி விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-


நேற்று முன்தினம் இரவு 2 பேர் எங்களிடம் வந்து ஒரு கடையின் சுவரில் துளைபோடவேண்டும் என தெரிவித்தனர். நாங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தோம். நள்ளிரவில் அவர்கள் எங்களை கூட்டிச்சென்றனர். அப்போது துளைபோடுவதற்கு தேவையான கடப்பாரையை எடுத்துச்சென்றோம். சுவரை துளைபோட்டபின்னர் தான் அது டாஸ்மாக் மதுக்கடை என்பது தெரியவந்தது.

துளைபோட்ட வழியாக உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ரூ.1400 மட்டும் இருந்தது. பெரிய அளவில் பணம் ஏதும் இல்லை. அதை தொடர்ந்து அங்கிருந்த குவாட்டர் மதுபாட்டில்களை கடையில் இருந்த 2 சாக்குப்பைகளில் அள்ளிப்போட்டு கட்டினோம்.

அதில் ஒரு சாக்குமூட்டையை எங்களை அழைத்துச்சென்றவர்கள் எடுத்துச்சென்றனர். இன்னொரு மதுபாட்டில் அடங்கிய மூட்டையை எங்களிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

நாங்கள் இருவரும் அந்த சாக்குமூட்டையை தூக்கிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றோம். பின்னர் சற்று மறைவான இடத்துக்கு சென்று அந்த மூட்டையை பிரித்து அதில் இருந்த 2 குவாட்டர் பாட்டில்களை எடுத்து குடித்தோம். அப்போது போதை ஏறியது.

இதனால் சிறிது நேரம் தூங்கிவிட்டு விடிவதற்கு முன் எழுந்து சென்று விடலாம் என நினைத்து தலைக்கு மதுபாட்டில் அடங்கிய மூட்டையை வைத்து இருவரும் தூங்கினோம். இரவு முழுக்க கண் விழிப்பு, மதுபோதை இவற்றால் பொழுது விடியும் வரை தூங்கி விட்டோம். அயர்ந்த தூக்கத்தால் போலீசாரிடம் சிக்கிக்கொண்டோம்.  
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதை தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை அழைத்து சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

டாஸ்மாக் ஊழியருக்கு கத்திகுத்து.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே நெட்ரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவர் சித்தாமூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலைப் பார்த்து வருகிறார்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு, அன்றைய விற்பனை பணம் ரூ. 1.75 லட்சத்தை பையில் எடுத்துக் கொண்டு விற்பனை தொகையைகண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.நல்லாமூர் அருகே வந்தபோது, 2 இளைஞர்கள் வழிமறித்து கத்தியால் குத்தினார்களாம். இதில் பலத்த காயமடைந்த அவர் சாலையில் விழுந்தாராம்.அப்போது அவரது கையில் இருந்த பணப்பையைப் பறித்துக் கொண்டு அந்த 2 இளைஞர்களும் தப்பி ஓடினர்.அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் விநாயகத்தை மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து சித்தாமூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

பணி விதிகள் வரையறுக்க வேண்டியும், காலமுறை ஊதியம் வழங்கக் கோரி 2013 அக்டோபர்மாதம் 23ம் தேதி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபான விற்பனையை 2003ம் ஆண்டு நவம்பர் மாதம்  தமிழக அரசு  தொடங்கியது..  தற்போது  மேற்பார்வையாளர்கள் ரூ.6 ஆயிரமும், விற்பனையாளர்கள் ரூ.4,400ம் ஊதியமாக பெற்று வருகின்றனர்.

2012&13 நிதி ஆண்டில் டாஸ்மாக்கிற்கு  ரூ.21,680 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கோடிகணக்கில் லாபம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவன மதுபான  கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய அடிப்படை சலுகைகள் எதுவும்  வழங்கப் படாமல் உள்ளது.

 டாஸ்மாக் ஊழியர்களுக்கு முறையாக பணி விதி முறைகள் வரையறுக்கப்படாததாலும், வெறும் சுற்றறிக்கைகள் மூலம் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுவதாலும், தவறு செய்யும் ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபட்டுள்ளது. மாநிலம்  முழுவதும் ஒரே மாதிரியான  பணி விதி முறைகளை வரைமுறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


 அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல தங்களுக்கும் வழங்கவேண்டும், பணிவிதிமுறைகளை வரைமுறைப்படுத்தவேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23ம் தேதி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே டாஸ்மாக் ஊழியர்கள்  உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்இப்போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி  வைக்கிறார்.

கருத்துகள் இல்லை: